சென்னை: தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக, சுங்கக்கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அதன்படி,  சில பகுதிகளில்  ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல்  மாதமும், சில பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டு  செப்டம்பர் மாதங்களில்  கட்டண உயர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, இந்த ஆண்டும்  தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும  கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால், மக்களவை தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால்,   கடைசி நேரத்தில் அந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது..

இந்த நிலையில், தற்போது மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில்,  36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஒரு முறை பயணிக்கும் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மாதாந்திர பாஸ் கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.