வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் உடல் நிலை தேறி உள்ளதால் அவர் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பு உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.  அந்த சோதனையில் டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. அதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.  அதன்பிறகு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் டிரம்புக்கு ரெம்டிசிவிர் மருந்து இரண்டாம் டோஸும் டெக்சாமெத்தசோன் முதல் டோசும் அளிக்கப்பட்டது. இந்த மருந்துகளால் டிரம்ப்புக்கு பக்க விளைவுகள் ஏதும் தென்படவில்லை.   அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிரம்ப் உடல்நிலை தேறி வருவதால் அவர் இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவருக்கு அங்கு சிகிச்சைகள் தொடரலாம் எனவும் சிறப்பு மருத்துவர் கோன்லி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் டிரம்ப் திடீரென மருத்துவமனை முன்பு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை காரில் வந்து சந்தித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.