சென்னை
தமிழக சட்டபேரவை கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. பிறகு, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது. இன்று 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது.
பின்னர் நடக்க உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து நிறைவாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.