டில்லி

ச்சநீதிமன்ற உத்தரவின்படி ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க உள்ளது. 

தேர்தல் பத்திரங்கள் திட்ட்ம் தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கி மூலம் விற்கப்பட்டு வந்தன. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெருமளவு நன்கொடையைப் பெற்றுக் குவித்தன.

கட்ந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிலைபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

ஸ்டேட் வங்கி  2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தற்போதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் தரும்படி உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி மனுத் தாக்கல் செய்தது. நேற்று இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது

கால அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை இன்று (மார்ச் 12) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு. வங்கிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது .

ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கும் தகவல்களைத் தொகுத்து 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதை நிறைவேற்ற தவறினால் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.