திருநள்ளாறு

ன்று மாலை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குச் சனி பகவான் இடம் மாறியதால் திருநள்ளாற்றில் விழா நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ளது. இங்கு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் கிழக்கு நோக்கித் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இன்று மாலை 5.20 மணிக்கு இக்கோவிலில் நடைபெற்றது.

இன்று மாலை, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குச் சனிபகவான் பிரவேசித்துள்ளார்.  இந்த சனிப்பெயர்ச்சி நாளில் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் சனி கிரகம் பிரவேசிப்பதைக் குறிக்கும் வகையில் மங்கள வாத்தியக் குழுவினர் இசையின்போது ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்தக் கோவில் வளாகத்துக்குள், தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள், தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் உற்சவரை வழிபட்டுச் செல்ல கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கோவில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை என 24 மணிநேரமும் கோவில் மூடாமல் விடிய, விடியத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.