சென்னை: கோவை அன்னபூர்ணா ஓட்டர் நிர்வாகி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.

அதன்படி இன்று மாலை 3மணி அளவில் கோவையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி குறிப்பிட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளானவர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (14.9.2024) மாலை 3.00 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வி.எம்.சி. மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் திரு. சொர்ணா சேதுராமன், திரு. எம்.என். கந்தசாமி, டாக்டர் அழகு ஜெயபாலன் மற்றும் மாநில , மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி குறிப்பிட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளானவர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.