சென்னை
இன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு (2026)இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. மக்கள் தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம், உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ர் கருத்துகளை தெரிவித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முன்மொழிந்தும் அவர் பேசுகிறார்.
பிறகு அனைத்து கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக பேச அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் தீர்மானத்தின் மீது தங்கள் கருத்துக்களை தெரிவித்து முடித்தவுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்.