சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் தனியார் பணிகளுக்கான தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்விஸ் தேர்வுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் மத்திய மாநிலஅரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதுபோன்ற பயிற்சி வகுப்புகளுக்கு தனியார் நிறுவனங்கள், பல ஆயிரம் கட்டணங்கள் வசூலித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. . இதுதவிர ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சிகளில் போட்டித் தேர்வுகளுக்கு படித்து பயிற்சி பெறுவதற்காகவே சிறப்பு நூலகங்களும் செயல்படுகின்றன. இதனை தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் இலவச குரூப் 4 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இது கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள். கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள். கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள். தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள். மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. TNPSC GROUP IV போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் – வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.
தற்போது நடத்தப்படவுள்ள பயிற்சி வகுப்பின் விவரங்கள் பின்வருமாறு :
பயிற்சி வகுப்பு – TNPSC GROUP IV
பயிற்சி வகுப்பின் நேரம் – முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
எனவே, மேற்காணும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகவும்:
அலுவலக முகவரி :
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்.
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32.
தொலைபேசி எண்: 044-22500134, 9361566648
எனவே, சென்னையில் இருக்கும் மாணவ, மாணவிகள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
[youtube-feed feed=1]