சென்னை

ந்த (மே) மாதத்துக்கான மின்சார கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிட்டு செலுத்தலாம் என மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீடுகளுக்கு வந்து கணக்கெடுத்துக் குறித்துக் கொள்வார். அத்துடன் வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதன் அடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக மின்சார அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவது வழக்கம் ஆகும்.

ஏற்கனவே மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையைக் கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.  இந்த தகவல் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

இந்நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம் எனவும் மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.  இந்த போட்டோவை நுகர்வோர் அவசியம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.