டெல்லி
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குறித்த் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னைப்பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதையொட்டி தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று யு.ஜி.சி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். ஆனால் தமிழக அரசு கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதி யு.ஜி.சி தலைவரை விடுத்து பிற மூன்று உறுப்பினர்களை கொண்டு தேடுதல் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் யு.ஜி.சி தலைவரை இணைத்து துணைவேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்,
“ஆளுநரின் உத்தரவு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன விதிகள்படி நடைமுறை உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சாசன விதிகளுக்கு முரணாகவும் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் கவர்னர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் சுப்ரீம்கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் விவர மனுவையும் ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்”
என்று முறையிடப்பட்டுள்ளது.