சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்  வரும் 14ந்தேதி இணையதளத்தில் வெளி யாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


2024-25ம் நடப்பாண்டிற்கான 10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ( மார்ச்)  28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை பொதுத் தேர்வுகள்  நடைபெறுகிறது.  ஏற்கனவே 10ம் வகுப்பு மாணவர்களுடன் செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இந்த  தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை  சேர்ந்த மொத்தம்  9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இவர்களில்   12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளுடன்,   25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும்  தேர்வு எழுத தயாராக உள்ளனர்.

இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும்  4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும்,48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,   10ம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் தேதியை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவ மாணவியருக்கான ஹால் டிக்கெட்டுகள் 14ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அன்று மதிய வேளையில்  இருந்ருது இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ எனும் இணையதளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பிறகு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஹால் டிக்கெட்டில் ஏதாவது தவறுகள் இருந்தால், அதனை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தேர்வுப் பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, மொழி போன்ற விவரங்களில் திருத்தம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.