சென்னை

தமிழகத்தில் பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் இணையம் மூலம் வீட்டிலேயே கல்வி பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.  தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  இதையொட்டி வரும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 9 முதல் 12 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இன்று பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அவை பின் வருமாறு :

* 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.

* வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்

* பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.

* பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

* பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.

* மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளைப் பகிர்ந்து உண்ணக் கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

* பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டுக் கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.

* பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

* அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் கைகளைக் கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.