டெல்லி: தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக தாக்குதல் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள தீஸ் ஹசார நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.


வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பிரச்னையே மோதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது. மோதலை தொடர்ந்து வன்முறையும் வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலில் பலர் காயம் அடைந்தனர்.
மோதலில் காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.


இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, உதவி காவல்துறை ஆய்வாளர்கள் கந்த பிரசாத், பவன்குமார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவத்தின் போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந் நிலையில், இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி படேல், ஹரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையை தொடர்ந்து, இருவருக்கும் இடைக்கால பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.