சென்னை: திருவள்ளுர் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த  துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. விபத்தில், இந்த ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. துரிதகதியில் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில், விபத்துக்குளான பயணிகள் ரயிலில் பயணித்த 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து மீட்கப்பட்டவர்களில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், உடனே விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் தேவையா உதவிகளை செய்ய உத்தரவிட்டதுடன், ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை உறுதிசெய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைந்து நலம்பெற விழைவதாக தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளத்  உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ரயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.