தூத்துக்குடி:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா  இன்று (மார்ச் 3ஆம் தேதி) காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி கோவிலின் நடை அதிகாலை 1 மணிக்குத் திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப பாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் அதிகாலை 4.52 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குப் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சியளிக்க உள்ளனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் திருநாள் அன்று சிவப்புச் சாத்தியும், 8-ம் திருநாள் அன்று பச்சை சாத்தி சப்பரத்திலும் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12ஆம் தேதி  நடைபெறுகிறது. மார்ச் 14-ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.