நாகர்கோவில்: குமரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரை கண்ணாடி பாலத்தில் சென்று பார்க்க கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குமரி கடற்கரையில் இருந்து படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு  சுற்றுலா பணிகளை அழைத்து செல்லும் சேவை நடைபெற்று வருகிறது. இங்கு திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடியிலான பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை காண வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், படகு சேவையை நடத்தி வரும், அரசின்  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், படகு சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது.   தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில்,  தற்போது திடீரென கட்டணத்தை உயர்த்தி உள்ளது.  இந்த புதிய கட்டணம்  நாளை முதல் அமலுக்கு வருகிறது.

குமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் நாளை முதல் உயர்வு என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சுற்றுலா படகு சேவை கட்டணம் நாளை(ஜூன் 5) முதல் உயர்த்தப்பட உள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சாதாரண கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. ரூ.300 சிறப்புக் கட்டணத்தில் உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிமுனையில் திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் திறந்து சில மாதங்களே ஆன நிலையில், படகு போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.