டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து,  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கமிட்டி, குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து 8 வாரங்களுக்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு,  அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த விசாரணை களின்போது,  பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், மத்தியஅரசு அதுகுறித்து தெரிவிக்க மறுத்து விட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்காத நிலையில், இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி, பெகாசஸ் விவகாரத்தில் 3 பேர்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி என்.வி.ரமணா,  பெகாசஸ்  விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை.மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுகேட்புப் பாதிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம். இந்தியர்களின் ரகசியத்தை காப்பது முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குடிமக்களின் அந்தரங்க உரிமைக்கு வயது வரம்பு  விதிக்க முடியும். அந்தரங்க உரிமைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது.

ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஒன்றிய அரசுக்கு போதிய அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது.

பெகாசஸ்  விவகாரத்தில் மையத்தால் குறிப்பிட்ட மறுப்பு எதுவும் இல்லை. எனவே மனுதாரரின் முதன்மையான சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால், பெகாசஸ் வரிசையில் உள்ள பொய்யை விசாரிக்கவும், உண்மையை கண்டறியவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதுதொடர்பாக  மூன்று பேர் கொண்ட குழுவில் ஒரு பகுதியாக பிரபல நிபுணர்களை தேர்வு செய்துள்ளதாக கூறிய நீதிபதிகள்,  அதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவின் மற்ற உறுப்பினர்களாக  அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழுவிலனர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  விவகாரத்தில் தனியுரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம்,  குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், 8 வாரங்களுக்குப் பிறகு விசாரணையை வெளியிடுமாறும் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இந்தியர்களைக் கண்காணிப்பதில் வெளிநாட்டு ஏஜென்சிகள் ஈடுபடுவது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.