சென்னை: ’பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது; ஒவ்வொரு பேயாக ஓட்டுகிறேன்’  என முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. அவர்கள் தமிழக மக்களைப் பிடித்த பீடைகள் .  அதனாலேயே தமிழ்நாடு  70 ஆண்டுகளாக வளர்ச்சியில்லாமல் இருக்கிறது என்றும் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னையில் உள்ள அழகுமுத்து கோன் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை வேதாளம் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்ததார்.

இந்த நிலையில்,  மாவீரர் அழகுமுத்துக் கோன் குருபூஜை விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ”மாவீரர் அழகுமுத்துக் கோனின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். 31 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த வீரர் அவர் என்றார்.

அப்போது செய்தியாளர்கள்  ஜெயக்குமாரின் வேதாளம் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை,  தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. தமிழக மக்களைப் பிடித்த பீடைகள் அவர்கள். 70 ஆண்டுகளாக வளர்ச்சியில்லாததற்குக் காரணமே இந்தப் பேய்கள்தான். அந்தப் பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது. அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பேயை ஓட்டிவிட்டு, அந்தப் பேய்க்கு வருகிறேன். பொறுத்திருங்கள்”.

அதைத்தொடர்ந்து,  அண்ணாமலை உருவ பொம்மையை காங்கிரஸார் எரிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ’’கோவையில் 10 பேர் வந்தார்கள். நெல்லையில் 6 பேர் வந்தார்கள். உருவ பொம்மையைத் தூக்கி வருவதற்கு சிலர் வர வேண்டுமே. அதற்காக வந்திருக்கிறார்கள்.  அதைப்பற்றி கவலை இல்லை என்றவர்,

நான் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று சொன்னது பொய்யா? குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்படவில்லை என்று சொல்கிறாரா?  என எதிர்க்கேள்வி எழுப்பியவர், அதற்காக உண்மையான காங்கிரஸார் அனைவரும் எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள், செல்வப் பெருந்தகை குறித்து உண்மையைப் பேசினேன் என்று பாராட்டு தெரிவிக்கிறார்கள்’’ என்று கூறினார்.

தொடர்ந்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் கைது குறித்த கேள்விக்கு, ‘’தமிழ்நாட்டில் கூலிப் படைகள், ரவுடிகள் மீது காட்ட வேண்டிய வீரத்தை சாட்டை துரைமுருகனை மீண்டும் மீண்டும் கைது செய்து, காவல்துறை காட்டிக் கொண்டிருக்கிறது’’ என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.