சென்னை: 5தலைமுறையாக வசித்து வரும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு, இதுஎங்கள் இடம் என கூறி வஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சிவன்கோயில்கள் அமைந்துள்ள இடம் வஃபுக்கு சொந்தமானது என்று கூறி வரும் இஸ்லாமிய அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலையையும் வஃபுக்கு சொந்தமானது என கூறி சர்ச்சையை உருவாக்கியது.  இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், மத்தியஅரசு வஃபு வாரிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டின்  வேலூர் மாவட்டம் இறையவன்காடு ஊராட்சியில் 5 தலைமுறையாக வசித்து வரும் சுமார்  300 வீடுகளுக்கு, அந்த பகுதி யில் உள்ள இஸ்லாமிய  தர்கா  சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா இறையவன்காடு ஊராட்சி எல்லையில் காட்டுக்கொல்லை என்ற கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 5 தலைமுறையாக மக்கள் வசித்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள 300 வீடுகள் அமைந்துள்ள இடம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்றும், அங்கு இனிமேல் குடியிருக்க வாடகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உரிமையாளர்களுக்கு விரிஞ்சிபுரம் ஹசரத் சையத் அலி சுல்தான்ஷா தர்ஹா சார்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நோட்டீஸ்  அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் பொதுமக்களிடம் பேசியதோடு இந்த விவகாரம் குறித்து வேலுார் ஆட்சியர் சுப்புலட்சுமியை சந்தித்து கடந்த 11 ஆம் தேதி மனு ஒன்றையும் அளித்தனர். அந்த மனுவில், ”நாங்கள் 5 தலைமுறைகளை கடந்து வசித்து வருகிறோம். எனவே நாங்கள் வசிக்கும் வீடுகள் எங்களுக்கு மட்டுமே சொந்தம்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு விரிஞ்சிபுரம் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்ஹா தரப்பில், ‘மேற்குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் எல்லாம் 1959 ஆம் ஆண்டு முதல் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் உள்ளன.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காட்டுக்கொல்லை கிராமத்தை மக்கள் கூறும்போது , ”5 தலைமுறைகளாக நாங்கள் வசித்து வருகிறோம். இப்போது நாங்கள் இருக்கும் இடம் வக்ஃப்க்கு சொந்தமானது என்று தர்ஹா தரப்பில் திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதை எப்படி ஏற்பது? இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் போராட்டத்தில் குதிப்போம் என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பாக இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கூறும் போது, ”இங்கு கோயில் இருக்கும் போது எப்படி வக்ஃப்க்கு சொந்தமான இடம் என்று சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதே சமயம், ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் முத்தவல்லி சையத் சதாம் கூறும் போது, ”காட்டுக்கொல்லை கிராமத்தில் 2 சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது. அவை ஆக்கிரமிப்பில் உள்ளன. இதற்கான பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இருக்கிறது.

காட்டுக்கொல்லை கிராமத்திலுள்ள இந்த இடம் யாருக்கு சொந்தமானது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வேலுார் கலெக்டர் சுப்புலட்சுமி கூறும் போது, ”இறையவன்காடு நில பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரண்டு தரப்பினரிடமும் நிலம் குறித்து, அவர்களிடம் இருக்கிற ஆவணங்களை பெற்று விசாரிக்க பணித்திருக்கிறோம். மாவட்ட வருவாய் அலுவலரின் அறிக்கை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.

வஃபு சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதை மீறி இஸ்லாமிய அமைப்பு, தலைமுறைதலைமுறையாக   மக்கள் குடியிருந்து வரும் இடம் தர்காவுக்கு சொந்தமானது என கூறியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…