சென்னை: இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, லண்டனில் வெளியிட உள்ள இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும், இது இந்தியாவின் பெருமை என கூறினார்.

இளையராஜா லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
எல்லோருக்கும் வணக்கம். இந்த புதிய சிம்பொனியை, உலகிலேயே தலை சிறந்த இசைக்குழுவுடன் இணைந்து லண்டனில் 8ம் தேதி வெளியிட இருக்கிறோம். ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. நல்ல மனதோடு வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். இசை நிகழ்ச்சி சிறப்பாக நடத்த இறைவனை வேண்டி கொள்ளுங்கள். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் உடைய பெருமை. இந்தியாவின் பெருமை. INCREDIBLE இந்தியா மாதிரி. நான் INCREDIBLE இளையராஜா. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சில செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். இதனால் கோபமடைந்த இளையராஜா, ‘அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது. நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான். உங்களுடைய பெருமையை தான் அங்க போய் நடத்த போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்’ என தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார்.