சென்னை

காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததில் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை இந்த சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி திருவேங்கடம் என்பவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக திருவேங்கடத்தை, காவல்துறையினர் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தற்காப்புக்காக திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையொட்டி சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுஆய்வு செய்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.