சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் குணம் அடைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இன்று மதியம் திடீரென அப்பல்லோ மருத்துவமனை வந்தார் திருமாவளவன். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் 2-வது மாடிக்கு சென்று அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து விவரம் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவியுள்ளது. எனவே அவர் உடல்நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக முதல்வரை நேரில் சந்திக்க இன்று நான் மருத்துவமனைக்கு வந்தேன்.
முதல்வர் சிகிச்சை பெறும் 2-வது மாடிக்கு நான் சென்றேன். அங்கு எந்த கெடுபிடியும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவை என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை. இருந்தாலும் அங்கிருந்த அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச முடிந்தது. அவர்களிடம் முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.
முதல்வர் ஜெயலலிதா நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர்.
அவர் விரைவில் குணம் அடைய விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வாழ்த்துகிறேன். நான் இங்கு வந்ததில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை.
ஏற்கனவே கருணாநிதி, மூப்பனார் மருத்துவமனைகளில் இருந்தபோது நேரில் சென்று உடல்நலம் விசாரித்துள்ளேன். அது போல இன்றும் நம் முதல்வரை காண வந்தேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Patrikai.com official YouTube Channel