சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக சட்டப்பேரைவையில் 110 விதியின்கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.. அதன்படி, பெரியார், கருணாநிதி, அப்துல்கலாம், வ.உ.சி உள்பட பலருக்கு, சிலை, மணி மண்டபம் அமைப்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். மேலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அறிவித்து உள்ளார். இது அரசியல் கட்சிகள் மற்றும்  பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னார் கூறியதாவது,

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துக்களை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை, மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களுக்கு வ.உ.சியின் பெயர் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்து உள்ளார்.

பொன்னார், ஏற்கனவே கடந்த மாதம், பெட்ரோல் விலை குறைப்புக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அப்போது, திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் திட்டங்கள் திமுக அரசு ஏராளமான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி உள்ளது. இனியும் திமுக அரசு மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.