கொழும்பு:
லங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது.

கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர 26 அமைச்சர்களும் பதவி விலகினர்.

இந்நிலையில், புதிதாக 4 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பதற்காக அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவிற்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இதனையடுத்து இன்று கூடும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயார் எனஅதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திரக்கட்சி விலக்கி கொண்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் எதிர்கட்சிகள் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.