டெல்லி: கொரோனா காரணமாக நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில்  4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ் கூறியதாவது: பயணிகள்  ரயில் சேவைகள் வாயிலாக, கடந்தாண்டு, 53 ஆயிரம் கோடி ரூபாய், வருவாயாக கிடைத்துள்ளது. கொரோனா காரணமாக, ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதன் விளைவாக, வருவாயானது 4,600 கோடி ரூபாயாக குறைந்தது. இது 87 சதவீதம் சரிவு. ஆனாலும், சரக்கு ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டை விட, 12 சதவீதம் குறைவான நிதியையே, ரயில்வே நிர்வாகம்  இந்த ஆண்டு செலவு செய்துள்ளது. குறைந்த ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் செலவு குறைந்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.