டில்லி

துபாயில் நடந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுலை கேள்வி கேட்டு மடக்கிய செய்தி போலி என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

சமீபத்தில் துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய நேர்காணலில் ஒரு 14 வயதுச் சிறுமி ராகுல் காந்தியை நோக்கி இரு கேள்விகள் எழுப்பியதாக செய்திகள் வந்தன.   அந்தப் பெண் எழுப்பிய இரு கேள்விகளால் ராகுல் காந்தி திணறிப் போனதாகவும் அவரால் பதில் அளிக்க முடியாததால் அந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டது.  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் தினமலர் உள்ளிட்ட பல தமிழ் ஊடகங்களும் இதை பதிவு செய்தனர்.

அந்த நிகழ்வில் அச்சிறுமி ராகுல் காந்தியிடம் “காங்கிரஸ் பல வருடங்களாக இந்தியாவை ஆண்டு வருகிறது.   ஆயினும் தற்போது இந்திய மக்கள் அடைந்துள்ள அளவுக்கு நன்மைகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது வராதது ஏன்?  நீங்கள் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை விடுத்து ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கலாமே.” என்பது போன்ற கேள்விகள் கேட்டதாக செய்திகள் வெளியாகின.    அந்தப் பெண்ணின் மற்றும் ராகுல் காந்தியின்  புகைப்படங்களும் செய்திகளுடன் பகிரப்பட்டன.

தற்போது இது குறித்து ஊடகங்களில் புதிய தகவல்கள் வந்துள்ளன.    இந்த புதிய செய்தியின் படி அந்த பெண்ணின் புகைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பெண் குழந்தைகளைக் காப்போம் என்னும் தலைப்பில் பேசிய வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.   அத்துடன் ராகுல் காந்தியின் புகைப்படங்களும் வேறு சில நிகழ்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும் என அந்த ஊடக செய்திகள் கூறி  உள்ளன.

ராகுல் காந்தி கலந்துக் கொண்ட அந்த இரு நிகழ்வுகளும் நேர்காணல் அல்ல, மற்றும் அந்த நிகழ்வுகள் எதிலும் 14 வயதுப் பெண் யாரும் கேள்விகள் எழுப்பவில்லை எனவும் அந்த ஊடகங்கள் இதற்கு புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளன.   மக்கள் இது போன்ற போலி செய்தி பரப்பிய குருமூர்த்தி மற்றும் இந்திய ஊடகங்களுக்கு வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இது குறித்த குருமூர்த்தியின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.