டெல்லி: 2021ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி,  பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் விவாதத்தில்  பங்கேற்க கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

நாடாளுமன்றத்தின் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி  29-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.  தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து, பாராளுமன்ற  இரு அவைகளும் நடைபெற்று வந்தன. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று  மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டுத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் (13ஆம் தேதி)  முடிவடைவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே வழக்கமாக 4 மணிக்கு கூடி வந்த மக்களவை, இன்று காலை 10 மணிக்கே கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.