விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில், சாலையை அடைத்துக்கொண்டு நின்ற பிஎம்டபிள்யு காரை, விவசாயி ஒருவர், அந்த காரை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸில் நகரின் புறநகர் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், தனது விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை, சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு சென்றதால்,  விவசாய நிலத்துக்கு  செல்ல முடியாததால்,  கோபமடைந்த அந்த பகுதி விவசாயி ஒருவர், வாகனத்தின்  உரிமையானரை பழிவாங்குவதற்காக  பிஎம்டபிள்யூ (BMW) காரைச் சுற்றி இரும்பு வேலி போட்டு சிறையில் அடைத்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கார் சிறைபட்டு இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கூறிய அந்த விவசாயி, தான்  வயலில் இருந்து வெளியேற வழி கிடைக்காத வகையில், காரைக்கொண்டு சாலையை அடைத்ததால், அந்த காரின் உரிமையாளருக்கு பாடம் கற்பிக்க எண்ணியதாகவும், அதனால்தான்,  இரும்பு  குழாய்களைக் கொண்டு, காரைச் சுற்றி வேலி அமைத்து சிறை வைத்தேன் என்று  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் காவல்துறை வசம் சென்றடைந்தது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர்,  இரும்பு வேலியை  அகற்றி காரை விடுவித்ததுடன், காரின் உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள்,  விவசாய பண்ணையின் பிரதான சாலைக்கு முன்னால், வழியை அடைத்துக் கொண்டு காரை நிறுத்தினால், விவசாயிகள்  அங்கு செல்வதும், கடினம். இதனால், சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.