கிருஷ்ணகிரி: ”தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி” என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களிடம் பேசும்போது,   செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி கேள்வி  எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அண்ணாமலை,   “அவர் ஒரு ரவுடி. அவருக்கு எல்லாம் தெரியும். அவரை விசாரிக்க வேண்டும்” என்ற ரீதியில் சொல்லியிருந்தார். செல்வப்பெருந்தகை பற்றி அண்ணாமலை கடுமையாக பேசிய விபரங்களை அறிந்து  செல்வபெருந்தகை கடுமையாக அண்ணாமலையை சாடியிருந்தார். இதைத்தொடர்ந்து செல்வபெருந்தகை குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது உள்பட அவர்மீதான வழக்குகளை பட்டியலிட்டார். இது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இநந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ரூ வட்டம் கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடி, அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  தனி நபர்களை தாக்கிப் பேசுவது பா.ஜ.,வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும். தமிழகத்தில் தற்போது தான் அதனை துவங்கி உள்ளனர். தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆட்சியாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை! அண்ணாமலை பட்டியல்…