மெஹெக் புரொடக்சன்ஸ் மற்றும் பிக் சினிமாஸ் தயாரிப்பில்உருவாகும் காமெடி திரைப்படம் “கன்னா பின்னா”. படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருப்பவர் தியா. “நாளைய இயக்குநர்” குறும்படபோட்டியில் பங்கு பெற்றவர். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி ராவ். “வன்மம்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர்.

இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. பொதுவாக ஒரு விழாவில் கலந்துகொண்டால் வாழ்த்துவதுதான் வழக்கம். ஆனால் இயக்குநர் தங்கர்பச்சான்தான் வித்தியாசமானவர் ஆயிற்றே… “இந்த படத்தை எடுத்து கஷ்டப்படப்போறீங்க..” என்று “வாழ்த்த..” படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.
தங்கரின் “கன்னாபின்னா” பேச்சு இதுதான்:
“இந்த விழாவில் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்குறீங்க.. இந்த மகிழ்ச்சி நிலைக்கணும்னா சினிமா தழைக்கனும்.. சினிமா தழைக்கனும்னா முதலீடு போடுறவன் சிரிக்கணும்.. இங்க முதலீடு போடுகிறவனை தவிர மற்ற அனைவரும் சிரிப்பதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது.. இங்கு பல குமுறல்கள் வெளிப்படும்.. குமுறல்களை சொல்லவேண்டிய மேடைதான் இது..
நூறு பேர் படம் எடுத்தால் 99 பேர் பணத்தை இழக்கும் நிலைதான் இங்கே உள்ளது.. அதை மாற்றணும்.. மாற்ற முடியாதது அல்ல அது. ஆனால் மாற்றவேண்டியவங்க அதை மாற்றணும். நிச்சயமா செய்ய முடியாத விஷயமில்ல இது.. நான் இந்த மாதிரி சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை.. ஏன்னா நான் சில உண்மைகளை பேசவேண்டி இருக்கும்.. ஆனால் நான் உண்மை பேசினா தாங்கமாட்டங்க அது நிறைய பேருக்கு பாதிப்பை உண்டாக்கும்..

எனக்கு பிடித்தமாதிரி நான் எடுக்குற படங்களை நான் பார்க்கிறதில்லை.. நிறைய சண்டை காட்சி, நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கிற படம் தான் எனக்கு பிடிக்கும். ஏன்னா படம் பொழுதுபோக்கா இருக்கணும்.. அதேசமயம் நாம சொல்ல வர்ற விஷயத்தை ஆணித்தரமா சொல்லணும்.. நான் அது மாதிரி படங்களை எடுக்காம போனாக்கூட என்னால ரசிக்க முடியும்..
இந்தப்படம் நல்லா வரும்னு தெரியுது.. ஆனா நீங்கதான் கஷ்டப்படனும்.. ஏன்னா இந்தப்படத்தை யாரும் வாங்க மாட்டாங்க… நீங்கதான் இன்னும் கொஞ்சம் முதலீடு போட்டு படத்தை வெளியிடனும்.. அப்படி வெளியிட்டீங்கன்னா,வெற்றி பெற்றீங்கன்னா அந்த லாபத்தை பிடுங்கிக்கொண்டு போகிறதுக்கும் சிலர் காத்திருக்காங்க. அதிலிருந்தெல்லாம் கவனமாக நீங்கள் மீண்டு வந்து தொடர்ந்து படங்கள் தயாரிக்கவேண்டும்” என பேசினார்
Patrikai.com official YouTube Channel