அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம்


சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.

பொது தகவல்:

இங்கு ஆனந்த தட்சிணா மூர்த்தி, சக்தி வினாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நாகலிங்கம், துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகள் உள்ளன. வடமேற்கு மூலையில் நவகிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.

பிரார்த்தனை:

கண்சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலக, சூரிய தோஷம் விலக இங்குள்ள சூர்யகோடீஸ்வரரை வணங்கிச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றியும், அபிஷேகம், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

தலபெருமை:

மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம். இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான்.

இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு ஒரு இலுப்பை மரக் கட்டையை உருவாக்கினார்.

தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்ப எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார்.

தினமும் மாலையில் சந்தியாவேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம். மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றாராம்.

இந்த புராண வரலாறு நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார்.

தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு. சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம்.

அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும்.

இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம்தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.

இங்குள்ள துர்க்கையின் ஒரு காலில் மட்டுமே மெட்டி உள்ளது. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் ஆகும். சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.

பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.

தல வரலாறு:

அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு சூரிய பகவானுக்கு தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம்.

பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே ! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் ? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.

தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். அந்த சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர்.

சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டி அவரை வணங்கினார்.

சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப்பணித்தார்.

சிறப்பம்சம்:

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.

அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கிக் கொள்ளலாம்.