பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் எச்எஸ் பிரனாய் ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். மேலும், சாய்னாவின் கணவர் கஷ்யப்பும், தனது மனைவியின் அருகாமையில் இருந்ததால், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வந்துசேரவில்லை.

அதேசமயம், இத்தகவல்கள் அனைத்தும் வாய்மொழியானவைதான். எழுத்துப்பூர்வ பரிசோதனை அறிக்கைகள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தாய்லாந்து விதிமுறைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 10 நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்படுவார்கள்.

அதேசமயம், சாய்னா மற்றும் பிரனாய் ஆகியோரிடம் தொடர்பில் இல்லாத இதர இந்திய வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.