நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்த ஓய்வுபெற்ற காவல்அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற காவல்அதிகாரியே கொலை செய்யப்படும் சம்பவத்தால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இன்று காலை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளது. உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த உசேன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார். உடலை அங்கிருந்து எடுக்க ஜாகிர் உசேன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தகராறு காரணமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் நடந்திருக்காது என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்த நிலையில், உடல் உடற்கூறு பரிசோதனைக் காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக, ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கு இடப்பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி டவுண் பகுதியில் அதிகாலையிலேயே நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.