தூத்துக்குடி:   தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதப்படுத்தும்   ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந் தனர். இதனால் அங்கு பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஆலை முன்பு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில்  அந்தஆலையில்   இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது.

இதன் காரணமாக,  அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகள மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து நிலா சீ புட் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  விபத்துக்கான காரணம்  குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே ஆலையில்,கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 50 பேர் பாதிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமோனியாவை அதிக அளவில் சுவாசித்தால் மூச்சுத்திணறல் உண்டாகும். தொடர்ந்து சுவாசிக்க வேண்டியது ஏற்பட்டால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்க நேரிடும் என்பது கவனிக்கத்தக்கது.