திருப்பூர்

நேற்று திருப்பூரில் நடந்த பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் ஒரு மொபைல் போன் பறந்து வந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கு முன்பு பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள், மலர் தூவி பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் மலர் தூவியபோது மலர்களுடன் மொபைல் போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது. இதனால் மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பதறினர்.

பிரதமர் மோடி தனது பாதுகாவலரிடம் சைகை காட்டி மொபைலை எடுக்கக் கூறினார். அவர் ஜீப் மீது ஏறி மொபைலை எடுத்து அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். மொபைல் வீச்சால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை விசாரணையில் மலர் தூவும் போது மொபைல் தவறி விழுந்தது தெரியவந்ததால் உரியவரிடம் அந்த மொபைலை ஒப்படைத்தனர்.