திருச்சூர்

திருச்சூர் கோவில் விழாவில் இரு யானைகள் ஆக்ரோஷமாக மோதியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் உபசாரம் சொல்லல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய 2 யானைகள் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் இரு யானைகளும் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது.

ரவிகிருஷ்ணன் யானை அப்போது திடீரென மிரண்டு அங்கும், இங்கும் ஓட தொடங்கியது. யானை மீது அமர்ந்திருந்த கீழ் சாந்திகள் சிலர் கீழே குதித்து உயிர் தப்பினர். யானை மீது இருந்த குடை, ஆலவட்டம் உள்ளிட்டவை கீழே விழுந்தது. இவ்வாறு  யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் பீதி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடிக்கச் சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.

பிறகு ரவிகிருஷ்ணன் யானையும், எதிரே நின்றிருந்த அர்ஜுனன் யானையும் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக மோதி தாக்கிக்கொண்டன. இந்த தாக்குதலில் அர்ஜுனன் யானை மீது இருந்த கீழ் சாந்திகள் கீழே விழுந்தனர். ரவிகிருஷ்ணன் யானையைக் கட்டுப்படுத்த முயன்ற பாகன் ஸ்ரீ குமாருக்குப் படுகாயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த ஆராட்டுப்புழா காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி ரவிகிருஷ்ணன் யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.