மைசூர்
மகளுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் கோவில் சமையல்காரர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார்.
பிருந்தாவன் லே அவுட் என்னும் இடத்தில் உள்ள பிள்ளையார் கோவிலின் சமையல்காரர் கங்காதர். இவரின் ஒரே மகள் நேகா. தாயை சில வருடங்களுக்கு முன் பறி கொடுத்த நேகாவை செல்லமாக வளர்த்து வந்தார் கங்காதர். தனது வறுமையையும் மீறி தன் மகளுக்கு கல்வி அளிப்பதில் ஆர்வமாக இருந்தார்.
நேகாவும் தாத்தா பாட்டியுடன் ஹெப்பாலில் தங்கி கல்லூரியில் நன்கு படித்து வந்தார். அவர் ஜே எஸ் எஸ் கல்லூரியில் பி எஸ்சி இறுதியாண்டு படித்து வந்தார். இந்த வருடக் கட்டணம் கட்ட நேற்றே கடைசி நாள் என்பதால் தன் தந்தையிடம் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். தன்னிடம் பணம் இல்லாததால், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் அனைவரிடமும் கடன் கேட்டார் கங்காதர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. மனம் உடைந்த கங்காதர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நேற்று காலை கல்லூரிக்கு செல்லும் முன் நேகா அப்பாவிடம் பணத்தை வாங்கலாம் என்றெண்ணி வீட்டுக்கு வந்தார். கதவை திறந்ததும் தூக்கில் தொங்கிய தந்தையைக் கண்டு அதிர்ந்தார். கண்ணீர் விட்டு கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் போலிசுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் சடலத்தை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளுக்கு கல்வி தர முடியாமல் ஒரு தந்தை மரணத்தை தழுவியது அக்கம்பக்கத்து மக்களையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.