ஐதராபாத்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. இதுவரை ரூ.650 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ரங்காரெட்டி பகுதியில்  கச்சிபௌலி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு  காரில் இருந்து கணக்கில் வராத 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டுக்காக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம்  மேலதிக நடவடிக்கைக்காக பணம் ஐடி துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளது.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வரும் 30ந்தேதி நடைபெற உள்ளது.   மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முந்தைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்)) வென்றது. இதன்மூலம் தெலுங்கானா முதல்வராக 2வது முறையாக சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநிலத்தை பொறுத்தவரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர்.டி.பி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் களத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு 103 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 2018 ஆம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களில் தான் வென்றிருந்தது.

இந்த நிலையில் அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சந்திரசேகராவும், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி உள்ளன.  தேர்தல் ஆணையம் பல்வேறு சேவைகளை சேர்ந்த 228 அதிகாரிகளை செலவு பார்வையாளர்களாக நியமித்துள்ளது.

இந்த நிலையில், வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுவதாக, மடப்பூர் எஸ்ஓடி போலீசாருக்கு மர்ம  தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், கச்சிபௌலி பகுதியில் கோண்டாபூர் தாவரவியல் சாலையில் இருந்து சிரெக் பப்ளிக் பள்ளி வழித்தடத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில், அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பெட்டிகள் முழுவதும் இருந்த அந்த 500 ரூபாய் கட்டுகளின் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பணத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அது வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிகிறது. அந்த பணம் ஐடி துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்களை சமர்பித்து உரிமையாளர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும்  தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததுமுதல் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.650 கோடி மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில்  நவம்பர் 30  தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறு கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி நடைபெறுகிறது.

ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்பட இருந்த, சுமார் 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இலவசப் பொருட்கள், போதைப் பொருட்கள், பணம், மதுபானம் மற்றும் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும். அக்டோபர் 9ஆம் தேதி 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து கைப்பற்றப் பட்ட பொருட்களின் மதிப்பு என்பது, 2018ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் முந்தைய சட்டமன்றத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பதிப்பை விட ஏழு மடங்கு (ரூ.239.15 கோடி) என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.