சென்னை: தமிழ்நாட்டில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான  டாடா நிறுவனம் ரூ.9000 கோடி மதிப்பில்,  மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. இந்த
மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வரும் செப்டம்பரில் அடிக்கல் நாட்டுகிறார் .

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். அதற்கான முயற்சிகளை   தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு  எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருவதுடன், வெளிநாடுகளுக்கும் சென்று தொழில்முனைவோர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றன.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற  , சென்னை  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு  6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவில் முதலீடு மற்றும் சுமார் 30 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏராளமான முதலீடுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது,  டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது. இந்த ஆலையானது,  ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைக்க இருக்கிறது. இதற்கான நிலம் ஒதுக்கீடு பணிகள் எற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில்,   இந்த ஆலைக்கு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – பெங்களூரு தொழில்வழித்தடத்தில் புதிய ஆலை அமைய உள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தியாகும் கார்களை சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.