சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்து வருவதால்,  திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வரும் 31ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் அங்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்து உள்ளது.

இதனிடையே, குறைந்த காற்றுழத்த தாழ்வுப்பகுதியால் இன்று மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், செங்கல்பட்டு, சிவகங்கை, விழுப்புவதில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ,  தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இன்று முதல் 30ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலும் அவ்வப்போது 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் நாளை முதல் 31வரை கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.