சென்னை: குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்றும், அவர்மீதான வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வபெருந்தகையை  வாழும் மகாத்மா என அழைக்கவா?  என  கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தலித்இன தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், விவாதப் பொருளாகவும் மாறி வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து ஆளும் கட்சி மீது தலித் தலைவர்கள் குற்றம் சாட்டி இருப்பதுடன், இதனுடன் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்துடனும் தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தொடர்பு உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். மேலும் அண்ணாமலையை,   “என்னடா ஐபிஎஸ் படிச்ச நீ ? சாதாரண கான்ஸ்டபிளுக்கு இருக்கும் அறிவு கூட இல்லையே கடுமையாக ஒருமையில் கூறியிருந்தார்.

மேலும்,  “நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரத்தை காட்ட வேண்டும், இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன்” என்று செல்வபெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். முடிந்தால் என்மீது வழக்கு போட்டு பாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை  தனது x தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை.

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி

2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)

2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி

2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்

2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்

2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.

இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்

கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள்  சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தது.

இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.

குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா?

இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா?

அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை.

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கு இல்லை. திரு.செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும்.

அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்

இவ்வாறு அதில்  கூறியுள்ளார்.

செல்வபெருந்தகை கூறியது என்ன?

கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர் என்று விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது தமிழக பாஜகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்களின் பட்டியலை செல்வப்பெருந்தகை வெளியிட்டிருந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன், கோபத்துடன் என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அதுகுறித்தும் விசாரிக்க கோரினோம். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்க உள்ளேன். அண்ணாமலை எதற்காக திடீரென ராஜினாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்.

எல்லோரையும் மிரட்டிக்கொண்டு வந்த அண்ணாமலையின் எதிர்காலம் தற்போது காங்கிரஸ் கையில் இருக்கிறது. என்மீது அவதூறு பரப்பியதற்காக காவல்துறையில் புகார் கொடுக்கலாம். தமிழகத்தில் எஸ்சி ஆணையம் மிக வலிமையானதாக இருக்கிறது. அப்படி கொடுத்தால் உன்னுடைய நிலைமை என்ன ஆகும்? மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்லும் போது ராம், ராம் அவரை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். எனவே அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.