சென்னை: 2023ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி உள்ளார். அதற்கான தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 வீடுகள் கட்டப்படுகின்றன. அடுத்த 12 மாதங்களில் இந்த வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி. சென்னை பெரும்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.