சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் சென்னையில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய  முன்பதிவு காலம் 2 நாளாக இருந்து வந்த நிலையில், தற்போது 7 நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல 7 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

திருப்பதிக்கு செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கி வருகிறது. இந்த பயணத்திற்காக 48 மணிநேரத்துக்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை யில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யும் கால அவகாசம் 2 நாட்களில் இருந்து 7 நாட்களாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதையடுத்து,  இனி சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல 7 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை சென்னை-2 என்ற முகவரியிலோ, 044-25333333, 25333444 என்ற தொலைபேசியிலோ 180042531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, தமிழக அரசின் சுற்றுலாத் துறையினர் திருமலை திருப்பதி தரிசனம் செல்ல ரூ.150 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி வருகிறது. இதை ஆயிரம் டிக்கெட்டுகளாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கும்,  தேவஸ்தானம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில்,  கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட  பல நகரங்களுக்கு  திருமலை சுற்றுப்பயணங்கள்விரிவுபடுத்தப்படும் என சுற்றுலாத்துறை தெரிவித்துஉள்ளது.  இந்த பயன்பாட்டுக்காக, TTDC AC மற்றும் AC அல்லாத பேருந்துகள் இரண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.