சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று இரு முறை கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில்,  சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை உள்பட பல துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற உள்ளன.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  அன்றைய தினம் பொதுநிலை பட்ஜெட்டும், 14ந்தேதி வேளாண் பட்ஜெட்டும், காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,  பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்  நடைபெற்றது. அதையடுத்து,  மானிய கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.  வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடை உள்ளது. இதையடுத்து, பேரவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று காலை, மாலை என இருமுறை சட்டப்பேரவை கூடுகிறது.

இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

அதையடுத்து, மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடுகிறது. அப்போது,  சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

நாளை (9ந்தேதி)  காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு 13-ஆம் தேதியும் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 13ந்தேதி காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

13 ஆம் தேதியுடன் அவை முடிவடையும் நிலையில், அன்றைய தினம், கேள்வி நேரம் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.