சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால், மீண்டும் போராட்டதை முன்னெடுப்பதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23ந்தேதி மாவட்ட தலைநகரம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மாயவன் தமிழ் ஜனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
சரண் விடுப்பு ஆணை அடுத்த ஆண்டு நிறைவேற்றுவதாக கூறுவது போகாத ஊருக்கு வழி வகுக்கும் என்றும், நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பட்ஜெட் தொடர்பாகஇ, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ர்ச் 14ந்தேதி மாலை நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்று ஆலோசித்தனர்.
தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயவன் பேசுகையில், “ தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை (மார்ச்.14) சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. நேற்று பொதுப் பணித்துறை அமைச்சர் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கை களை எடுத்து சொன்னோம்.
இதுவரை இந்த நான்கு ஆண்டுகளில் 8 முறை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தெளிப்படுத்தி னோம். 4 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி கொண்டு தான் உள்ளோம். இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த முதலமைச்சர்கள் எல்லாம் பேச்சு வார்த்தை என்றால் சாதகமான அறிவிப்பு அறிவிப்பார்கள்.
எங்களுக்கு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போடு இருந்தோம். நேற்றே எங்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று நம்பி இருந்தோம், எந்த முதலமைச்சர் கடந்த காலத்தில் ஆதரவு அளித்தாரோ அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பி இருந்தோம். ஆனால் அதில் ஒரு இம்மி அளவு கூட நிறைவேற்றவில்லை. மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
எங்கள் ஆசிரியர், அரசு ஊழியருக்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை சொல்ல போராட்ட பதாகையை தூக்கி பிடிக்க வருகிற 23 ஆம் தேதி இதுவரை தமிழ்நாடு கண்டிராத வகையில் மாவட்ட தலைநகரங்களில் 6 லட்சம் வரை ஆசிரியர் அரசு ஊழியர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 30 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ குழு கூடும், அதுவரை அரசுக்கு நேரம் கொடுக்கிறோம். தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம் அதில் இருந்து பின் வாங்க மாட்டோம்.
எங்களை நம்புங்கள் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நாங்களும் நம்பினோம். முன்பு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் அரசு காலத்திலும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அப்போது மட்டும் உபரியாக பட்ஜெட் இருந்ததா என்ன? நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது, கொடுக்க மனமில்லை. இப்போது மட்டும் என்ன? ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் , மக்கள் நிர்வாக நலன் சார்ந்த போராட்டத்தை முன் எடுக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சேகர் பேசுகையில், “சரண் விடுப்பு தடை ஆணை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இன்று பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. 110 விதி கீழ் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். டெட் தேர்வை ரத்து செய்து சாதாரண முறையை கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரை சில அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அதிகாரிகள் பேச்சை கேட்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
பட்ஜெட் குறித்து கருத்த தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம் , கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திமுக அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது என தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் கானல் நீராகிப் போய்விட்டது என தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம், தமிழக அரசின் பட்ஜெட், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.