சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

தமிழக ரேசன் கடைகளில், அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்பட மளிகை பொருட்களும் குறைந்த விலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பருப்பு பாமாயில் போன்ற பொருட்கள் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதால், பெரும்பாலோர்  குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ரேசன் கடைகளில் வாங்குவதையே விரும்புகின்றனர்.

இதையடுத்து, ரேசன் கடைகளில் தட்டுபாடின்றி பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் வகையில்,  வெளி சந்தையில்  வாங்க அரசு  டெண்டர் கோரி உள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள். ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நியாய விலைக்கடைகளுக்கு தேவையான துவரம் பருப்பு, பாமாயிலை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.  ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான 6 கோடி பாமாயில் பாக்கெட், 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.