சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில்,  இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு கடந்த நான்கு மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியத்துடனும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,தமிழக அரசானது  அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக,  அரசு ஊழியர்களுக்கு 1.1.2025 அன்று தேதிப்படி அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். 1.10.2025 முதல் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறலாம் என்பது உள்பட 9 அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி,   மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் . ஓய்வூதியதாரர்கள் இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்” என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 53%ல் இருந்து 55%ஆக உயர்ந்தது. இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில், “மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டது.

ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லாப் பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படி திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்குக் குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாகக் கணக்கிடப்பட வேண்டும். அதுவே. 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்,உடற்பயிற்சி இயக்குநர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

ஊராட்சி செயலாளர்கள் மேலும் ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும். சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் /எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருந்தும்.

திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப் பணியாளர்களுக்கும், சில்லறைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்க வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேரப் பணியாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.