சென்னை: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் PM SHRI திட்டத்தை செயல்படுத்தாததால், மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு உரிய கல்விநிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. மேலும், மத்தியஅரசின்  சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டும், தமிழ்நாடு எம்.பி.க்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்தும் நிதியை விடுவிக்க வலியுறுத்தி உள்ளனர். இருந்தாலும் மத்தியஅரசு நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது.

மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல காரணங்களால் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெரும் மோதலே நிலவி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்பட்டும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

மத்திய அரசின் நிபந்தனைக்கு தமிழ்நாடு உட்படாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கூட “மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான ரூ. 2,291 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]