சென்னை: தமிழ்நாடு அரசு, சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன். பூம்புகாரில் சுற்றுலா விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
பூம்புகாரில் ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நம் பாரம்பரிய மிக்க தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவில்கள், புராதான சின்னங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி வால்பாறை போன்ற இயற்கையாக அமையப்பெற்ற மலைவாச சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டுமென சுற்றுலா உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர்மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் திருமதி.ச.கவிதா அவர்கள், கண்காணிப்பு பொறியாளர், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும் தொகுப்பு சுற்றுலாக்களான எட்டு நாட்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, நான்கு நாட்கள் ஆறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா , மூன்று நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், மூனார் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலாக்களால் ரூபாய்.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், படகு குழாம்கள், தொலைநோக்கு இல்லங்கள் மற்றும் தொகுப்பு சுற்றுலாக்கள் போன்றவற்றால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிதுள்ளதின் காரணமாக அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.
மேலும், அனைத்து ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, ஓட்டல் மற்றும் படகு குழாம்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பலதரப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றார்போல் உணவு வழங்கி விருந்தோம்பலில் சிறப்புடன் திகழவேண்டுமெனவும் அடிப்படை வசதிகளில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து விருந்தினர்களை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றும், அனைத்து மண்டல அலகுகளிலும் வரவுசெலவு மற்றும் விருந்தினர்களிடம் விருந்தோம்பல் குறித்த தகவல்களை மண்டல மேலாளர் மற்றும் மேலாளர்களுடன் உரையாற்றி மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா தொகுப்பு செயல்திறன்பற்றியும் தீவுத்திடல் வரவு செலவு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முந்தைய ஆய்வுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மீதான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்க்கொண்டார்.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிலையான இயக்க நடைமுறை குறித்த கையேட்டினை வெளியிட்டார்கள்.