சென்னை: ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தேவையான  துவரம் பருப்பு , பாமாயில் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு  டெண்டர் கோரி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் கடந்த சில மாதங்களாக,  கார்டுதாரர்களுக்கு முறையாக பாமாயில், துவரம் பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை. இது சர்ச்சையை எற்படுத்தியது. இதையடுத்து, ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள். ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

ஆனால் கடந்த  சில  மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு கூறிய நிலையில், தற்போது,  அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது.

அதில்,  பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்பிக்க 27-ந்தேதி கடைசிநாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.